கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Friday, October 10, 2008

கசப்பான அப் "பொழுது"

"இறக்குவானை நிர்ஷன்" வலைப்பதிவிளிருந்து

ஓர் அனுபவப்பகிர்வு - கசப்பான அப் "பொழுது"

எழுதக்கூடாது என நான் நினைத்திருந்த விடயத்தை எனது அன்பு நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதுகிறேன்। இலங்கையின் மிகச்சிறந்த அறிவிப்பாளர்களில் பெரிதும் பேசப்படும் நான் அதிகம் நேசிக்கும் லோஷன் அண்ணாவின் ஒரு பதிவு கூட இதனை எழுதுவதற்கு ஒரு காரணம்।
ஊடகத்துறை என்னுடைய இலட்சியத் துறை।வீரகேசரி ஆசிரிய பீடத்தில் இணைவதற்கு முன்னர் நேர்முகத்தேர்வுக்காக நான் ஏறி இறங்கிய ஊடக நிறுவனங்கள் ஏராளம்। தமிழ்மொழிக்கு தாம்தான் என ஆங்கிலத்தால் அலங்கரித்து தம்மை முதல்தரம் என இப்போது சொல்லிக்கொள்ளும் நிறுவனம் ஒன்றுக்கு அப்போது மவுசு அதிகம்।
2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அந்த நிறுவனத்துக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றேன்। உயர்தரம் எழுதிவிட்டு முதன்முறையாக செல்லும் நேர்முகத்தேர்வு அது। ஊடக நிறுவனம் என்பதால் நான் எழுதிய அனைத்து பத்திரிகை ஆக்கங்களையும் சான்றிதழ்களையும் எடுத்துச்சென்றேன்।
என்னை தேர்வுக்குட்படுத்தியவர் "அழகு" அண்ணா என அழைக்கப்பட்ட அப்போது உயர்பதவியில் இருந்த அறிவிப்பாளர்।
ஒரு மணிநேரம் எனக்கு மொழிபெயர்ப்பு வேலைகள் தரப்பட்டன। என்னால் முடிந்தளவு சிறப்பாக செய்துமுடித்தேன்। அவருக்கு சந்தோஷமாய் இருந்தது। அதனை முகத்தில் கண்டுகொண்டேன்। தமிழில் தட்டச்சு செய்ய முடியுமா எனக்கேட்டார்। ஒரு மாதத்தில் பழகிக்கொள்வேன் என நம்பிக்கையுடன் கூறினேன்।
மீண்டும் எனது சான்றிதழ்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சொன்னார்। எங்களுக்கு பத்து நாட்களுக்குள் ஒருவரை எடுத்தாக வேண்டும்। உங்களுக்கு ஒரு வாரத்தில் தொழில் உறுதிப்பத்திரமும் வேலைக்கு வரவேண்டிய நாள் குறிப்பிட்டு ஒரு கடிதமும் வீட்டு விலாசத்துக்கு வரும்। அதை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட திகதியில் வேலையில் இணையுங்கள் என்றார்।
எல்லா தெய்வத்தையும் ஒருமுறை மனதில் பிரார்த்தித்தேன்। எனது இலட்சியத்தில் முதலடி எடுத்துவைக்கப்போகிறேன் என்ற சந்தோஷத்தில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை। அந்த தரமான நல்ல நிகழ்ச்சிபடைக்கக்கூடிய சிறந்த அறிவிப்பாளரிடம் வேலை செய்யப்போகிறேன் என்பதே பெருமை தந்தது।
இன்னும் சற்று நேரத்தில் கேட்டார்,

அவர்: தம்பி கேட்க மறந்திட்டன்। உமது சொந்த இடம் எங்கே?
நான்: இறக்குவானை
அவர்:றக்குவானையா? அது எங்கே இருக்கிறது? எந்த மாவட்டம்?
நான்: இரத்தினபுரி மாவட்டம்। இரத்தினபுரியிலிருந்து 53கிலோ மீற்றர் தூரத்தில
அவர்: (தலையை பேனையால் சுரண்டிக்கொண்டார்।மற்றைய கை வழமைபோல் தாடையை உரசிக்கொண்டிருந்தது)
இரத்தினபுரி மலையகமே?
நான்: ஆமாம் சார்
அவர்: ஓ... முதலிலேயே சொல்லியிருக்கலாமல்லோ? ..............................................ம்ம் சரி பிரச்சினையொன்டும் இல்ல. உங்களுக்கு கடிதம் வரும்

கடைசியாகச் சொன்ன வசனங்களில் ஏதோ வெறுப்பும் ஏன் இவ்வளவு நேரத்தை செலவுசெய்தோம் என்ற மனநிலையும் தெரிந்தது. முகமும் மாற்றமுற்றது.ஒன்றும் புரியாதவனாக இருந்தேன். சரி தம்பி கடிதம் வரும் என்றார் சற்று எரிச்சல் தொனியில்.

நம்பிக்கையுடன் திரும்பினேன். நண்பர்கள் உறவினர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன். தொழில் என்பதை விட எனது இலட்சியம் என்பதில் தான் அளவில்லா களிப்பு எனக்கு.

ஆனாலும் எதிர்பார்த்திருந்த எனக்குக் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. ஒருமாதத்திற்குப் பிறகு அந்த நிறுவனத்துக்கு அழைப்பினை எடுத்து தட்டச்சுப் பிரிவில் தொழில்செய்த அண்ணாவின் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.
அவர் சொன்ன பதில் இதுதான்.
"தம்பி கவலப்படாதீங்க.நீங்க தோட்டத்திலருந்து(மலையகம்) வந்தனாலதான் வேலை கிடைக்கல. இங்க இன்னொருத்தர எடுத்திட்டாங்க. இன்னொரு நாள் சந்தர்ப்பம் வரும். ட்ரை பண்ணுங்க. இன்னும் நிறைய பேப்பருக்கு எழுதுங்க. சரி எனக்கு இப்ப கதைக்க முடியாது. பிறகு எல்லா விஷயத்தையும் அண்ணாகிட்ட சொல்றேன்" என்றார்.
இறுதியில் நான் நிறைய விடயங்களை படித்தேன். மலையக மக்களின் வாழ்க்கையை விரிவாக படிக்கவேண்டும் என நினைத்தேன்.
துறைசார்ந்த பலவற்றை பலருக்கு சொல்லிக்கொடுத்து ஊக்கப்படுத்திய இவரா இப்படி நடந்துகொண்டார் என நினைக்கையில் கவலையாகத்தான் இருந்தது. உண்மையில் இன்னும் அதை நினைத்து வேதனைபட்ட பொழுதுகள் நிறைய இருக்கின்றன.
சரி பிரச்சினையில்லை. ஆனாலும் தோட்டப்பகுதி(மலையகம்) என்னை வெறுத்ததால் அதனை உடைத்தெரிந்து ஊடகத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நிறையவே அடிபட்டு வீரகேசரியில் இணைந்தேன். எத்தனையோ விடயங்களை வெளிப்படுத்தியதால் வீரகேசரியும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையும் நல்ல களமாக அமைந்தன.ஆசிரிய பீடத்தின் நல்ல ஒத்துழைப்பு எனக்கு ஊக்கம் தந்தது.
எனக்கு நடந்த இந்தக் கசப்பான சம்பவம் பற்றி மூத்த அறிவிப்பாளரும் அரச ஒலிபரப்பு நிறுவனத்தின் பணிப்பாளருமான மதிப்பின் பாத்திரமான விஸ்வநாதன் அவர்களிடம் கூறியபோது அவர் சொன்னார்
என்ன தம்பி?இப்படி கவலைப்பட்டிருந்தால் நானும் எப்போதோ விழுந்திருப்பேன்.எல்லாரும் நாம் எதிர்பார்ப்பதுபோல் இல்லை. எமக்கான வழியை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

.