
நானும் நீயும்
ஓடிப்பிடித்து விளையாடிய
ஒற்றையடிப்பாதை,
காடுப்பத்தி...
காணாமல் போயிருந்தது
சலசலத்து
சங்கீதம் பாடி!
ஊரின் நடுவால்
ஊடறத்து ஓடிய
ஆறுகள் இரண்டும்
அடையாளமற்றுப்போயிருந்தன
ஊஞ்சல் கட்டி ஆடிய
எல்லைப்புற ஆலமரம்
எப்படி மறைந்தது
சுவடுகளற்று...
கறையானும் பாம்பும்
வாழ்வதற்காய்
புதிதாக அங்கே
புத்துகள் முளைத்திருந்தன
ஊர்பற்றி
ஒவ்வொரு நினைவும்
ஊசியாய் குத்தியது மனசை
திரும்பிடும்
திசைகள் தோறும்
நமதான ஞாபங்கள்
கைகாட்டி முறுவலிக்கிறது
கிட்டி, கிளித்தட்டு
பட்டம், பம்பரம்
மறந்துபோன விளையாட்டுக்கள்
மறுபடியும்
ஞாபகம் வந்தது
மயானத்தை
நினைவூட்டுவதாய்
நமதான..
அழகிய கிராமம்
அழுக்காகிப்போன
நினைவுகளை...
தூசுதட்டி,துடைத்து
வாசிக்கையில்
அழுகை வந்தது
தூரத்தில்
சிரட்டையும் மண்ணும்
சிதறிக்கிடந்தன..
விளையாட யாருமில்லாமல்.
நன்றி
நாச்சியாதீவு பர்வீன்
நூல் : சிரட்டையும் மண்ணும்.