மார்ச் 08 - மகளிர் தின வாழ்த்துக்கள்.(08.03.2009)
பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது?
பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்.
ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.
இவை பெரியாரின் கூற்றுக்கள்
இந்த கூற்றுக்கள் இன்று மகளிர் தினத்திற்காக ஒரு ஞாபக குறிப்பாக வைத்துக்கொள்ளுவோம்.
இன்று 150 ஆண்டுகளுக்கு முன் மேலைத்தேயவர்களினால் இந்தியாவிளிருந்து கோப்பித்தோட்டங்களுக்கும், தேயிலை தோட்டங்களுக்கும் கூலிகளாக கொண்டுவரப்பட்ட மக்கள் கூட்டமே இன்றும் இலங்கையின் பொருளாதரத்தில் முக்கிய பங்கை வகிப்பது யாவரும் அறிந்த உண்மைகள்.(1968 களில் இலங்கை தேசிய வருமானத்தில் 75% ) இன்றைய மகளிர் தினத்தில் அவர்கள் பற்றிய ஒரு பார்வையை உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கின்றேன். அதற்கு முன் இந்த பாடலையும் ஒரு முறை நினைவு கூறுவது பொருத்தமாகும்.
"கோண கோண மலை ஏறி
கோப்பி பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சின்னு
ஒதச்சானாம் சின்ன தோர"
"ஊத்தாத அடமழையில்
ஒதறல் எடுக்குதடா - அந்த
தாத்தான் கணக்கப்புள்ள
கத்தி தொலைக்கிறானே
ஏத்தல ஏறி எறங்க முடியுமா
சீத்துபூத்தன் னெனக்கு
சீவன் வதை போகுதையோ
எத்தனை நாளைக்கிதான் - இந்த
எழவ எடுக்கிறது
வெக்கங்கெட்ட நாயிகளும்
எகத்தாளம் போடுதுன்னு
இருந்துதான் பாத்துடுவோம்"
இந்த பாடலின் வரிகள் மலையக பொண்கள் அவர்களுக்கு இழைக்கும் சுரண்டல்களுக்கு சினம்கொண்டு பாடுவதாகும்.மலையக பெண்கள் இந்த ஆண் ஆதிக்கத்தில் இருந்து இன்னும் முற்று முழுதாகா விடுப்படவில்லை எனபது குறிப்பிடகூடியவொன்று.
இவர்களின் வேலைத்தளங்களைப் பற்றி சிலவற்றை கூற வேண்டும்.
# சாதரணமாக காலை 5 மணிக்கு துயில் எழுந்து (கடும் குளிரிளும்,பனியிலும்) கனவன் உட்டப்பட பிள்ளைகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு தயார் செய்து பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல ஒழுங்கு செய்ய வேண்டும்.
# அதே நேரம் 7.30 மணியலவில் புறப்பட்டு 8.00 மணிக்கு முன் சுமார் 4 - 8 வரையான கிலோ மீற்றர் வரை நடந்தே சொல்ல வேண்டும்.
# தான் பறித்த கொழுந்துகளை தேயிலை தொழிற்சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் இருக்கும் பட்சத்தில் தொழிற்சாலைக்கு தானே சுமந்து வர வேண்டும்.(கற்பினி பெண்கள் இதற்கு விதிவிலகல்ல)
# வேலை தளங்களில் இவர்களுக்கு தேனீர் வழங்கப்படமாட்டாது(பொதுவாக வேறு அனைத்து தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் தேனீர் வழங்குவது குறிப்பிட தக்கது)
# வேலை தளங்களில் கழிவரைகள் மற்றும் ஓய்வறைகள் இல்லை என்பது முக்கியாமாக கவனத்தில் கொள்ள வேண்டும். (கழிவரைகள் இல்லாத வேலைத்தளம் உலகிலே இதுவொன்றாக தான் இருக்க வேண்டும்)
# மழை காலங்களில் ரப்பர் பொலித்தீன்களை தலைகளுக்கு அணிந்துக் கொண்டு பணிபுரிவார்கள். (அட்டை பூச்சி மற்று விஷ ஜந்துகளிற்கு மத்தியில்)
# முதலுதவி சலுகைகள் கிடையாது.
இவை தவிர இன்னும் ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டும் கேட்டபதற்கு யாரு முன் வராத நிலையில் தொழில் புரிகின்றார்கள்.
இப்பிரசினைகளுக்கு தீர்விற்கு எந்த அரசியல்வாதிளையும் நம்பி பிரயோசனமில்லை. இதுவரை இது போன்ற விடயங்களை எந்த மேடைகளிலும் சரி வேறு இடங்களிலும் சரி அரசியவாதிகள் பேசியதாக சரித்திரம் இல்லை.மக்கள் முன் வந்து ஒன்றுப்பட்டு போராட்டங்களை நடத்தும் வரை விடிவோ விமோசனமோ கிடையாது என்பது மட்டும் உறுதி.
அடுத்ததாக பொண்களின் கல்வியை உற்று நோக்கினால்,
ஓரளவு தற்போது கல்வியில் முன்னேற்றம் கண்டுவருகின்றன என்ற போதும் முழுமை பெறவில்லை என கூறலாம். இவர்களுக்கு கல்வியில் முன்னேற முட்டுக்கட்ட்டையாக இருப்பது பொதுவாகவே வருமானமின்னையே.
மற்றது அக்கறையின்மை, சரியான வழிகாட்டல்கள் இல்லாதமை என்று இன்னும் ஏராளமாக கூறலாம்.
அதோடு ஆசிரியர் தொழிலை தவிர வேறு துறைகளில் அவர்களின் பங்கு மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் வேறு அரச துறைகளில் எமக்கு இடமில்லை என்பதோடு சகோதரயினத்தவர்களுக்கு இணையாக போட்டி போட்டு கல்வி கற்க பாடசாலைகளில் போதிய வளமின்மை.
இன்னும் ஏராளமான அநீதிகள் மலையகத்தில் நடந்து வருகின்ற அதே வேளை வடக்கில் யுத்த சூழ்நிலையில் எம் பொண்களுக்கு ஏற்ப்பட்டு வரும் கொடுமைகளும் ஏராளம் என்பது யாவரும் அறிந்த உண்மையே. இவ்வளவு நடந்தேறிக்கொண்டு இருக்கின்ற வேலையில் எம்மால் எப்படி கூற முடியும் பெண்கள் சரிசமமாக வாழ்கின்றார்கள், பெண் அடிமை ஒழிந்து விட்டது என்று.? ஒரு பக்கம் பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வந்தாலும் கூட இன்னும் பல அடிப்படை தேவைகள் கூட அற்ற நிலையிலே கிராமிய பெண்களின் வாழ்க்கை இன்னும் தொடர்கின்றது
பச்சை பசேலாக
பசுமை நிறைந்ததாக
காட்சி கொடுக்கும்
மலையகம் !
அதன்
பசுமைக்குள்
ஒழிந்திருக்கும்
எம் பெண்களின்
ரணங்களும் வேதனைகளும்
அவள்
சிந்து கண்ணீரில்
பூத்து குழுங்கும்
தேயிலைச் சொடிகள்.
கண்ணீர் வெளிவராமல்
காவல் காக்கும்
மலைகளும்
அதிகாரவர்க்கமும்.
உனது
சோக கீதத்தை
காற்றினில்
பரவ செய்திடு
உனக்கொரு
விடிவு தேடி
விழித்திரு
இல்லையேல்
இன்னும்
பல யுகங்கள்
விடியாமலே
போய்விடும்.
உனக்கு
துணையாக
நாம்மிருப்போம்.
சிறகு
விரித்து பறந்திடு.
- சானா.கலை
இராகலை
உழைக்கும் கரங்களே உங்களுக்கு மணமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும். உங்களுக்கு தலைவணங்குகின்றேன்.





பெரியாரின் கூற்றுக்கள்
பெரியார் என்ற வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அத்தளத்திற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
பெண்கள் தினத்தைப்பற்றி தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
ரசனைக்காரி....internationalwomensday...இதனோடு தொடர்புடைய கவி்தைகள் சில
தேயிலைச் செடிசந்தியில் நடந்த கதைமலையகம் தொடர்பான வலைப்பதிவு
நண்பரும் சக வலைப்பதிவாளருமான நிர்ஷனின்
புதிய மலையகம் வலைப்பதிவு